சொத்துக்களால் ஏற்படப்போகும் வில்லங்கம் : கடும் கலக்கத்தில் முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்
வருமானத்திற்கு மீறிய வகையில் கொழும்பில் முக்கிய இடங்களில் நிலங்களை வாங்கி குவித்த முன்னாள் சக்தி வாய்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் கடும் கலக்கத்தில் உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஏற்கனவே பல முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்குகள் மற்றும் அவர்கள் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து ஏராளமான விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆச்சரியமான பதிலை அளிக்கும் அரசியல்வாதிகள்
இருப்பினும், இந்த சொத்துக்கள் எவ்வாறு கிடைத்தன என விசாரிக்கும் போது பல முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் விசாரணைக் குழுக்களுக்கு ஆச்சரியமான பதிலை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் பலர் இரத்தினபுரியில் ரத்தினச் சுரங்கங்கள் வைத்திருப்பதாகவும், சிறிது காலத்திற்கு முன்பு ஒரு பெரிய ரத்தின கல்லை பெற்றதாகவும், இதனை இரத்தினபுரியில் உள்ள தாய்லாந்து நாட்டவருக்கு பணத்திற்காக விற்றதாகவும், அந்தப் பணத்தில் இந்த சொத்தை வாங்கியதாகவும் கூறியுள்ளனர். ரத்தினத்தை வாங்கிய தாய்லாந்து நாட்டவரைக் கண்டுபிடிப்பது கடினம் என்று பல முன்னாள் எம்.பி.க்கள் விசாரணைக் குழுக்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் குழுக்கள், சில முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்த பில்லியன் கணக்கான சொத்துக்கள் குறித்து ஏற்கனவே ஏராளமான தகவல்களைச் சேகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு முன்னாள் சக்திவாய்ந்த அமைச்சர் நம்பமுடியாத அளவு பணம் மற்றும் சொத்துக்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் மாளிகை வாங்கி மகனுக்கு எழுதிய முன்னாள் அமைச்சர்
விசாரணைகளில் இருந்து இந்த முன்னாள் சக்திவாய்ந்த நபர், கொழும்பு 03, பம்பலப்பிட்டி பகுதியில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய நிலத்தில் ஒரு பெரிய மாளிகையை வாங்கி தனது மகனின் பெயருக்கு மாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கேட்டபோது, முன்னாள் சக்திவாய்ந்த நபர்ரத்தின கற்கள் பற்றி விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பில் ஒரு பெரிய நிலத்தை இந்த சக்திவாய்ந்த அரசியல்வாதி எவ்வாறு வாங்கினார் என்பது குறித்தும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
நடத்தப்படும் இந்த விசாரணைகள் மூலம், ஏராளமான முன்னாள் சக்திவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது அதிர்ச்சியில் உள்ளனர் என கொழும்பு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
