குண்டு துளைக்காத வாகனங்களை மீண்டும் கோரிய முன்னாள் ஜனாதிபதிகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆகியோர் தமது பதவிக் காலத்தில் பயன்படுத்திய குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் மீண்டும் கோரியுள்ளனர்.
தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக தெரிவித்து குறித்த வாகனத்தை மீண்டும் தமக்கு வழங்குமாறு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கம் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் மீளாய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றார்.
மேலும், 2015 ஆம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட மற்றுமொரு வாகனத்தை அரசாங்கத்திடம் மீள ஒப்படைத்திருந்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனக்கென வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீள அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தார்.
இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இரு முன்னாள் ஜனாதிபதிகளும் குறித்த வாகனங்களை மீண்டும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
