பிரான்சில் பரபரப்பாகும் தேர்தல் களம் - மக்ரனின் அணிக்கு பெரும்பான்மை ஐயம்
நாளை பொதுத்தேர்தல்
பிரான்ஸில் 1958ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்த அளவான வாக்குப்பதிவு இடம்பெறலாமென்ற எதிர்வுகூறலுடன், நாளை 12 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.
முதற்சுற்றுக்குரிய பரப்புரைகள் நேற்று முடிவடைந்த நிலையில், அரச தலைவர் இம்மானுவேல் மக்ரன் வாக்காளர்களுக்கு விடுத்த அழைப்பில் தனது அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்தத் தேர்தலின் வாக்களிப்பு வீதம் 1958 இற்கு பின்னர் மிகக் குறைந்த அளவில் 46 வீதத்தை மட்டும் எட்டக்கூடும் என்ற எதிர்வுகூறல்கள் வந்துள்ளன. 29 வீதமான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிப்பில் மிக ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்ரோன் வாக்காளர்களுக்கு விடுத்த அழைப்பு
இந்த நிலையில் அரச தலைவர் இம்மானுவேல் மக்ரோன் வாக்காளர்களுக்கு விடுத்த அழைப்பில் தனக்குரிய அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர், காலநிலைமாற்றம், மற்றும் சமூக சீர்குலைவுகளால் பிரான்ஸ் ஒரு சவாலான நிலையை எதிர்நோக்குவதாக குறிப்பிட்ட மக்ரன், அதிதீவிர வலதுசாரிகளும் அதிதீவிர இடதுசாரிகளும் பிரான்சை சீர்குலைக்க திட்டமிடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொருளாதார வல்லுநர்களது அறிக்கை
இந்தத் தேர்தலில் புதிய உத்வேகத்துக்குரியதாக கருதப்படும் ஜீன்-லூக் மெலன்சோன் தலைமையிலான இடதுசாரி அணிக்கு ஆதரவாக 170இற்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் 21 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் முதன்முறையாக, நவதாராளவாதத்தை முறியடிக்க இடதுசாரிகள் ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.