யாழ்ப்பாணத்தில் வர்த்தகரின் மோசடி அம்பலம்
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் மென்பான போத்தல்களில் காலாவதி திகதி மாற்றம் செய்யப்பட்டு மற்றும் காலாவதி திகதியை அழித்து வர்த்தகர் ஒருவரினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, யாழ் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனுக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
தகவலுக்கு அமைய விரைந்து செயற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் யாழ்ப்பாண நகரப்பகுதிகளில் இருந்த வர்த்தக நிலையங்களில் எழுமாறாக பரிசோதனை மேற்கொண்டனர்.
மென்பான போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம்
இதன்போது காலாவதி திகதி கடந்த மென்பான போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்தும் மற்றும் காலாவதி திகதியை அழித்தும் மென்பானப் போத்தல்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டமை பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டது.
இதனைதொடர்ந்து விநியோகஸ்தரின் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள களஞ்சியசாலை யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
அங்கு காலாவதி திகதி அழிக்கப்பட்ட நிலையில் 1110 மென்பான போத்தல்களும், 600 காலாவதியான மென்பானப்போத்தல்களும் என மொத்தம் 1710 போத்தல்கள், கடைகளிற்கு விநியோகம் செய்வதற்கு தயார் நிலையில் இருந்த போது பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, குறித்த விநியோகஸ்தருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
