ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்..! ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் தாமதக் கட்டணம்
இலங்கை கடற்பரப்பில் கடந்த நாற்பது நாட்களாக காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பலுக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
97000 மெற்றிக் தொன் எடையுடைய மசகு எண்ணெய் கப்பல் இவ்வாறு கொழும்பு துறைமுக கடற்பரப்பில் காத்து கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நாள் தோறும் ஒன்றரை லட்சம் டொலர் தாமதக் கட்டணம் செலுத்த நேரிட்டுள்ள நிலையில் ஏன் அவ்வாறு இடமளிக்கப்பட்டது என்பதனை விசாரணை செய்யுமாறு பெட்ரோலிய வள நிறுவனங்கள் கோரியுள்ளன.
தாமதக் கட்டணம்
இந்த மசகு எண்ணெய் கப்பலை விடுவிப்பதற்கு 70 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும் எனவும் அதற்கு நடவடிக்கை எடுக்காது, தாமதக் கட்டணங்களை பாரியளவில் செலுத்துவதற்கு இடமளிப்பது பாரிய தவறு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மசகு எண்ணெய் இல்லாத காரணத்தினால் சபுகஸ்கந்த எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த 7ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.