தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் விடுதலைப்புலிகள் அமைப்பைப் போன்று அழிந்து விடும் - விமர்சனத்திற்கு பதிலடி!
விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை போன்றே தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பு இறுக்கமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும் இறுக்கமான கட்டமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் காணப்பட்டதன் காரணமாகவே அவர்கள் அழிந்து போனதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,
“தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உருவாகிய போது அந்தப் பண்புகளை உடைய ஒரு அமைப்பாக செயற்பட வேண்டும் என்ற ஆழமான ஒரு புரிதலோடு தான் உருவாகியது.
முன்னணியும் அழிந்து விடும்
இன்றைக்கு எங்களுடைய அமைப்பை பற்றி பேசுகின்ற பொழுது, எங்களிடம் விமர்சிக்கின்ற கோணத்தில் முன்வைக்கின்ற கருத்துக்கள் இறுக்கமான விட்டுக்கொடுப்பு இல்லாத மக்களின் ஆதரவை பெற முடியாது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் இறுக்கமாக இருந்து, அதனால் தான் அழிந்து போனது. நீங்களும் அப்படித்தான் இறுதியில் அழிந்து போவீர்கள் என்பது தான் வழமையாக சொல்லும் கருத்து.
எங்களுடைய அமைப்பினை பொறுத்தவரையிலே மாமனிதர் குமார் பொன்னம்பலம் இந்த அமைப்புக்கு தலைமை தாங்கி இருந்தால் அப்படிப்பட்ட கருத்துக்களுக்கு சொல்லி இருக்கக்கூடிய பதில் நாங்கள் தோற்பதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதாகும்.
அரசியல் மோசடி
அதேபோல் சிதம்பரநாதன் கூறிய வார்த்தை, அவரது பார்வை தமிழினம் சம்பந்தமாக சாதாரண மக்கள் சம்பந்தமாக மக்கள் போராட்டம் சம்மந்தமாக இன்றைக்கு நடைபெறுகின்ற அரசியல் என்ற பெயரில் நடைபெறுகின்ற மோசடிகள், இன விற்புக்கள், துரோகங்கள் இதுபற்றி அவர் வைத்திருக்கின்ற பார்வையோடு எங்களுக்கு எந்தவிதமான கூச்சமில்லாமல் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓரிடத்தில் இருக்கின்றோம்.
தேசம் தாண்ட மறுப்பு
தேசியத் தலைவரின் கடைசி காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட பல அரசியல் ஆய்வாளர்கள், பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்கின்ற முக்கிய நபர்கள் ஆகியோர் பலர் அவருக்கு உயிர் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார்கள்.
பலர் அவரை இந்த நாட்டை விட்டு தற்காலிகமாக வெளியே வரச்சொல்லி கேட்டார்கள், ஆனால், நான் இந்த இடத்தினைத் தாண்ட மாட்டேன் என்று கூறியிருந்தார். மேலும் இறுதி வரை அவருடைய பாதையிலிருந்து அவர் மாறவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
