கம்மன்பிலவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நூல் - ஒரு திட்டமிட்ட நாடகம் : சீலரத்ன தேரர் பகிரங்கம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள நூலானது ஒரு திட்டமிட்ட நாடகம் எனவும், கம்மன்பில போன்றவர்களின் செயற்பாடுகள் இனவாதத்தைத் தூண்டும் முயற்சியாகும் எனவும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள நூலானது ஒரு திட்டமிட்ட நாடகமாகும். இது கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களை பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே தென்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலம்
இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது மக்கள் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளோ அழைக்கப்படாமை பாரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.

உண்மையாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அக்கறை இருந்திருந்தால் இந்த நூல் தொடர்பில் உரிய விசாரணை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு எவ்வித உத்தியோகபூர்வ தரப்பினரும் இன்றி இவ்வாறானதொரு நூலை வெளியிடுவது யாரைப் பாதுகாப்பதற்கான முயற்சி.
உதய கம்மன்பில என்பவர் இருவேறு நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு நபர். கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எரிசக்தி அமைச்சராக இருந்து கொண்டு எரிபொருள் வரிசைகளை உருவாக்கி இறுதியில் மக்களிடம் இருந்து தப்பித்துக்கொண்டவர்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது வரிசையாக அமர்ந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களைக் கேட்பது வேடிக்கையாக உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக விரல் நீட்டுவதை விடுத்து அன்றைய காலப்பகுதியில் ஏன் மௌனமாக இருந்தீர்கள்.
ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தல்
குறித்த நிகழ்வில் உரையாற்றப்பட்ட விடயங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சரியானவை அல்ல என்பதை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்து பாதியிலேயே வெளியேறியமையானது அவர் எடுத்த மிகச் சரியான தீர்மானமாகும்.
கம்மன்பிலவின் கருத்துக்கள் அர்த்தமற்றவை என்பதாலேயே சஜித் பிரேமதாச அந்த இடத்தை விட்டுச் சென்றார். உண்மையை உணர்ந்து கௌரவமாக வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவரை நாம் மதிக்கின்றோம்.

கம்மன்பில போன்றவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மக்களின் மனதை விகாரப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் முயற்சியாகும். இவ்வாறான அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முடியும். நாட்டைப் பாதுகாக்க அனைவரும் இவ்வாறான பிளவுபடுத்தும் முயற்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உண்மையான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் அரசியல் இலாபம் தேடுவதைக் கைவிட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்