சிறுமி துஷ்பிரயோகம் - அயல்வீட்டு இளைஞன் கைது
கொடிகாமத்தில் அயல்வீட்டு இளைஞன் 6 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துன்புறுத்தியதாக கொடிகாம காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சிறுமியின் உறவினர்கள் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட கொடிகாம காவல் துறையினர் நேற்றைய தினமே சிறுமியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளதுடன் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குறித்த சிறுமியின் பெற்றோர் பூநகரியில் வசித்து வருகின்ற நிலையில் சிறுமி கொடிகாமத்தில் உள்ள பேர்த்தி வீட்டில் தங்கியிருந்தார்.
சிறுமி நேற்று அயல் வீட்டில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பி வரும் வேளையில் பக்கத்து வீட்டு இளைஞன் சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் கயிற்றினால் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளார்.
அதன்பின்னர் சிறுமியின் உறவினருக்கு " சிறுமியின் தந்தை வந்தால் தான் சிறுமியை விடுவிப்பேன்" என கூறியுள்ளார்.
அந்த இளைஞனுக்கும் சிறுமியின் தந்தைக்கும் இடையில் நகைப் பிரச்சினை இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.