தங்கம் மற்றும் வலம்புரி சங்கு என்பன கடத்திய மூவர் கைது! (படங்கள்)
மன்னார் பேசாலை கடற்பரப்பில் 470 கிராம் தங்கம் மற்றும் வலம்புரி சங்கு என்பன கடத்திய மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேசாலை கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை (25) இரவு கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் பயணித்த படகினை பரிசோதித்த போது 470 கிராம் தங்கம் மற்றும் வலம்புரிச் சங்கு ஆகியவற்றை கடற்படையினர் மீட்டனர்.
மேலதிக விசாரணை
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட புத்தளம் மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூபா 09 மில்லியன் என கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள், தங்கம், சங்கு மற்றும் படகுகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க அலுவலகத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




