அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மேலதிக வரப்பிரசாதங்களை ஏற்கனவே நீக்கியுள்ளோம்.
ஓய்வூதியம் இரத்து
குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றம் சென்றிருந்தனர்.

எனினும், குறித்த ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையில்லை என்றும், சாதாரண பெரும்பான்மை வாக்களிப்பின் மூலமே அதனைச் செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
சபாநாயகரால் வெள்ளிக்கிழமை (6) நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் பிரகாரம், எம்.பி களின் ஓய்வூதியத்தை முற்றாக இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கும். மக்கள் பணத்தை வீண்விரயம் செய்வதைத் தவிர்த்து அதனை மீண்டும் மக்களுக்கே சென்றடையச் செய்வதே எமது இலக்காகும்.
அதேவேளை அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |