கோட்டா - மகிந்த அரசாங்கம் தரமான தரகர் நிறுவனம் - வெளிவரும் கடும் குற்றச்சாட்டு
கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கமானது அரச சொத்துக்களையும் பெறுமதிமிக்க காணிகளையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்ற தரமான தரகர் நிறுவனமாகியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் ஒவ்வொரு பிரஜைகளினதும் தனிநபர் கடன் அளவு ஒன்றரை இலட்சம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா தற்போதுவரை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை பட்டியலிட்டார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று சில பொருளாதார பதிவுகளை மாற்றி திரிபுபடுத்திக் கூறுகின்றது. இன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் போதுமான பணம் அரசாங்கத்திடம் இருப்பதாகக் கூறினாலும் அது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். பொருளாதார நெருக்கடி விடயத்தை மக்கள் முன்பாக அரசாங்கம் உண்மையான விம்பத்தை முன்வைப்பதில்லை.
1961 பில்லியன் ரூபாவை ஸ்ரீலங்கா அரசாங்கம் வருடவருமானமாக எதிர்பார்த்தாலும் ஏப்ரல்வரை 482 பில்லியனே கிடைத்துள்ளது. 676 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனாக செலுத்தப்பட்டது. வெளிநாட்டுக் கடனை செலுத்தமுடியாதபடி ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் வங்குரோத்தடைந்துள்ளது. இதுவரை இறக்குமதி கட்டுப்பாட்டை அரசாங்கம் செய்தாலும் அதுவும் வெற்றியளிக்கவில்லை.
ஸ்ரீலங்கா இன்று மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கியுள்ளது. 13 ரில்லியன் வரையான கடன் கடந்த வருடம்வரை இருந்தது. ஆனால் இந்த வருடத்தில் 3 இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபா வரை அதிகரித்துள்ளது. தனிநபர் கடன் ஒன்றரை இலட்சம் ரூபாவில் அதிகரித்துள்ளது. முழு நாட்டுக் கடனிலும் 47 வீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளது.
வருகின்ற ஜனவரியில் 500 மில்லியன் டொலர்களும், ஏப்ரலில் மேலும் 700 மில்லியன் டொலர்களும் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஜுலை மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் இருப்பிலுள்ள அந்நிய செலாவணி அளவு என்ன என்பதை தெரிவிக்க மறுக்கின்றது. ஒட்டுமொத்த திறைசேரியே கடன்பட்டுவிட்டது. பங்களாதேஷிடம் இருந்து அந்நிய செலாவணியான 200 மில்லியன் டொலர் மாற்றீடும், இந்தியாவிடத்திலிருந்து ஒருதொகை டொலர்களும் கிடைக்கவுள்ளன.
ஆனால் அவை இன்றுவரை உறுதியாகவில்லை. இந்நிலையில் கடன்மேல் கடன்பெற்று கடன்களை செலுத்த முடியாத நாடாக ஸ்ரீலங்கா மாறிவருகின்றது. அரச நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் கடந்த 4 மாதங்களில் 270 பில்லியன் நட்டத்தை அடைந்துள்ளன. ஆனால் இன்று ஆசிரியர்கள், அதிபர்கள் கேட்கின்ற 56 பில்லியனை ஒதுக்கமுடியாத நிலைமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
ஆகவே தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று இந்த உண்மையை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஊழல் மோசடிகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீலங்கா அரசாங்கம் அரச சொத்துக்களையும் காணிகளையும் விற்பனை செய்கின்ற சிறந்த தரகராக மாறிவிட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.