அதிகாரத்தை தக்க வைக்க கோட்டா - மஹிந்த அரசின் சூழ்ச்சி அம்பலம் -தேரர் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கையில் பௌத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவித்து அதிகாரத்தை கைப்பற்றிய கோட்டா - மஹிந்த அரசாங்கம், தற்போது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் கிறிஸ்தவர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய சங்க சபையின் செயலாளர் ஹெடிகலே விமலசார தேரர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர், பிரதான சூத்திரதாரியென எவரும் இல்லை என கூறுவதன் பின்னணி குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னதாக பௌத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவித்திருந்தது. இதன் ஊடாக பௌத்தர்களை ஏமாற்றி அதிகாரத்திற்கு வந்தது இந்த அரசாங்கம். இன்று அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு அதனையே செய்கின்றது.
ஒரு புறத்தில் கத்தோலிக்க சபையையும் கத்தோலிக்க மக்களையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள இந்த அரசாங்கம், ஒட்டுமொத்த பௌத்த தலைவர்களையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குகின்றது. அரசாங்கத்திற்கு நெருக்கமான பௌத்த தேரர்களை அழைத்து பேராயரையும், கத்தோலிக்க சபையையும் விமர்சித்தனர்.
சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த காணொளிக்கு பெரும்பாலான பௌத்த மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள பௌத்தர்களுக்கு விருப்பமில்லை. கத்தோலிக்க திருச்சபையையும் அந்த மக்களையும் விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை செய்யவில்லை. இந்த தாக்குதலின் பின்னணியில் மிகப்பெரிய சூத்திரதாரி என யாரும் இல்லையெனக் கூறுகின்றார்கள். தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் எவ்வாறு அரசாங்கத் தரப்பு கருத்து வெளியிட முடியும்.
அவ்வாறெனின் இதன் பிரதான சூத்திரதாரி அரசாங்கத்துடன் நெருக்கமானவர் இல்லையெனின் அவர் இந்த அரசாங்கத்திற்கு உள்ளேயே இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது. மக்களின் சந்தேகமும் இதுதான். இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கியர்கள் யார் என்ற தகவல்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையில் காணப்படுவதாக நாம் நம்புகின்றோம். அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். அந்த தகவல்கள் அடங்கிய 23 தொகுதிகளையும் வெளிப்படுத்துமாறு கோருகின்றோம்.