அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை - நேரடியாகவே தெரிவித்தாரா அமெரிக்க தூதுவர்!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் குடியுரிமை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா இதுவரை பரிசீலிக்கவில்லை எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் கடந்த ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாடு திரும்பினார். அதன் பின்னர் அவர் அண்மையில், துபாய் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
துபாயில் கோட்டாபய

இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,
“கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச அவரது குடும்ப உறுப்பினர்களுடன் துபாய் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விசா மறுப்பு

இதேவேளை, எவ்வளவு முயற்சி செய்தாலும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அதனால் முயற்சிக்க வேண்டாம் எனவும் அமெரிக்க தூதுவர், கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றே அவர் இதனை தெரிவித்துள்ளார் எனவும் தெரிலிக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் கோட்டாபய குடும்பம்

அமெரிக்கத் தூதுவர் இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் போது கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச உட்பட முழு குடும்பமும் உடனிருந்ததாகவும் அறியமுடிகிறது.
இந்த செய்தியால் அவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்த தகவலின் முழுமையான உண்மைத் தன்மை தொடர்பில் எந்த விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் இது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.