புகலிடம் கோரினாரா சிறிலங்கா அதிபர்..! சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட உடனடி அறிவிப்பு
புதிய இணைப்பு
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கு வருகை தந்ததை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், சிறிலங்கா அதிபர் எந்தவொரு புகலிடத்தையும் கோரவில்லை. அத்தோடு, சிங்கப்பூர் பொதுவாக புகலிட கோரிக்கைகளை வழங்குவதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் எழுச்சி மற்றும் பதவி விலகல் கோரிக்கையை அடுத்து, சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது இராஜினாமாவை வழங்குவதாக அறிவித்திருந்த போதிலும் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.
அவர் இன்னும் இராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கவில்லை என்றாலும், இன்று சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார்.
சிறிலங்கா அதிபர் தனது இராஜினாமாவை தாமதப்படுத்தியதன் காரணமாக, நாட்டின் எதிர்காலப் போக்கை தீர்மானிக்கும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கு இடையூறாக சிறிலங்கா தற்போது அரசியல் குழப்பத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் தரையிறக்கம்
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச பயணித்த SV-788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே கோட்டாபய சிங்கப்பூர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபிய விமானம்
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவிலிருந்து கோட்டாபய இவ்வாறு சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார்.
சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபிய விமான சேவையின் எஸ்.வீ. 788 விமானத்தில் பயணிப்பதாக மாலைதீவு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய அவரது துணைவியார் மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இந்த விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.