கோட்டாபயவின் பிரத்தியேக விமானத்திற்கு பணம் செலுத்திய சிறிலங்கா அரசாங்கம்..! உறுதிப்படுத்திய அமைச்சர்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த விமானத்திற்கான பணம் சிறிலங்கா அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, ஆம் என பதில் வழங்கியதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முன்னாள் அதிபர்களுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " அதிபர் தேர்தல் சட்டங்களுக்கமைய, தற்போதைய அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்களுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன.
முன்னாள் அதிபரும், அவரின் பின்னர் அவரது மனைவியும் அதிபருக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள்.
முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவிக்கு அத்தகைய வரப்பிரசாதங்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாக அறிகிறேன்" எனக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் பெரும் தொகையை செலவு செய்த கோட்டாபய
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கடந்த 11 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றார்.
இதேவேளை, கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை விடுதிக்கான கட்டணமாக செலுத்தியதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.
விடுதி தங்குமிட கட்டணமான 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தற்பொழுது தாய்லாந்தில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவை விடுதி வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து காவல்துறையினர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.