மகிந்த போல் அல்ல கோட்டாபய! ஆளும் தரப்பில் இருந்து வந்த தகவல்
அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடுவதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண (Tissa Vitharana )குற்றம் சுமத்தியுள்ளார்.
தனக்கு வழங்குவதாக கூறிய அமைச்சர் பதவியும் இதுவரை வழங்கப்படவில்லையென தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் அவர் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்த போது எம்முடன் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்தார். ஆனால் அவ்வாறான நடைமுறையை நடப்பு அரசாங்கத்தில் காண முடியவில்லை. அதனால் அரசாங்கத்தில் உள்ள குறைப்பாடுகளை எமக்கு சுட்டிக்காட்ட முடியாமல் உள்ளது.
தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி பயணிக்கின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் சிரமமப்படுகின்றனர். இவ்வாறான பல பிரச்சினைகள் உள்ளன. இவை தொடர்பில் கதைக்க எமக்கு சந்தர்ப்பமில்லாமல் உள்ளது.
எனக்கு உறுதியளித்தபடி அமைச்சரவையில் எனக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை. நான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. ஆகவே அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனை வழங்கவும் முடியாதுள்ளது.
மக்கள் சிரமத்திற்குள் விழுவதை தடுக்க என்னிடம் பல யோசனைகள் உள்ளன. கொவிட் சமூகத்தில் பரவலடையும் போது அதனை தடுக்க பிரத்தியேக வேலைத்திட்டம் ஒன்றை அமுலாக்க வேண்டும். அது தொடர்பான எனது ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனது ஆலோசனைகள் ஏற்கப்பட்டிருக்குமானால் நிலைமை கடினமாய் இருந்திருக்காது” என்றார்.