நாட்டை சீரழித்த கோட்டாபயவை மக்கள் விரட்டியடித்தமை மகிழ்ச்சியே!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். அவர் மூலம் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்ப்புக்கள் ஏதும் நிறைவேறவில்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கோட்டாபய அதிபராக பதவியேற்று 2 வருடங்களுக்குள் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட போது எந்த கவலையும் நாம் அடையவில்லை.
கோட்டாபயவின் வெளியேற்றத்தால் மகிழ்ச்சி
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்றவில்லை.
முறையற்ற வகையில் செயற்பட்டார்.
மேலும் நாட்டுக்கு அழிவை மாத்திரம் மிகுதியாக்கினார். அதேவேளை சட்டக் கல்லூரி பரீட்சை மொழி தொடர்பான பிரச்சினைக்கும் கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பேற்க வேண்டும்.
மீண்டும் ஒரு வாய்ப்பு
அவரின் இந்த தவறுகளை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இரண்டரை வருட காலத்தில் மக்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகியதையிட்டு, நாங்கள் கவலையடையவில்லை” எனவும் தெரிவித்தார்.
