மீண்டும் தமிழர்களை புறக்கணித்த கோட்டாபய
இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களாக அனைவரையும் பெரும்பான்மை இனத்தவர்களாக நியமித்துள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ, இந்த நியமனத்திலும் தமிழர்களை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைக்கான சட்டத்தின் 12 ஆம் பிரிவின் முதலாம் சரத்திற்கான கட்டளைகளுக்கு அமைய இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லியன ஆராச்சிலாகே ஜகத் பண்டார லியனஆராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தன, ஓய்வுபெற்ற நீதிபதி பீ.ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன் ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
அண்மையில் கலகொட அத்தே ஞானசாரதேரர் தலைமையில் நியிமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் எழுந்த கடுமையான விமர்சனத்தை அடுத்து பின்னர் தமிழர்கள் நியிமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.