கொழும்பு அரசியலில் திருப்பம் - மாற்றத்திற்கு உடன்பட்டார் கோட்டாபய
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக சிறிலங்கா சுதந்திக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய பிரதமருடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் தெரிவித்ததாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாக கோட்டாபய ராஜபக்ச அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஊடாக தெரியப்படுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் கலந்துரையாட அரச தலைவர் மாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கும் ஆளும் தரப்பின் கட்சித் தலைவர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.
இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு அரச தலைவர் மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.