மேலதிக எரிபொருளை வழங்க அறிவிப்பு! பயண கட்டணங்களை குறைக்க தீர்மானம்
பெட்ரோலின் விநியோகத்தை அதிகரித்தால் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் பத்து லீட்டர் அல்லது அதற்கு மேலதிகமாக எரிபொருளை வழங்க அனுமதித்தால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்க வசதியாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுக்கப்பட்ட அறிவித்தல்
அதேவேளை, குறித்த கலந்துரையாடலின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீட்டர் அதிகரிப்பதற்கு அதிபரின் ஆலோசகர் தீர்மானித்ததாக ஜயருக் கூறியுள்ளார்.
இந்நிலையில், மேலதிக எரிபொருளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு அதிபர் செயலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.