அரச ஊழியர்களுக்கு பேரிடி - நெருக்கடியில் சிக்கிதவிக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் சம்பளமற்ற விடுமுறையில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தேர்தல் தாமதம் காரணமாக மூன்று மாதங்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் சுமார் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பின்னணியில் அரச ஊழியர்கள் தொடர்பில் உடனடியாக தீர்மானத்தை எடுக்குமாறு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிகளின் உறுப்பினர்கள் அரச சேவைகள் அமைச்சரும்,பிரதமருமான தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, தேர்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படும் நிலையில் அரச ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
3100 அரச ஊழியர்கள்
இவ்வாறான பிரச்சினை இதற்கு முன்னரும் தோற்றம் பெற்ற நிலையில் அமைச்சரவை ஊடாக தீர்வு எடுக்கப்பட்டதாகவும், தற்போதும் இந்த பிரச்சினைக்கு அமைச்சரவை மட்டத்திலான தீர்வை விரைவாக எடுக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3100 அரச ஊழியர்கள் சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ளமையினால் அவர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தேர்தல் இடம்பெறும் வரை இவர்களால் சம்பளமில்லாத விடுமுறையில் இருக்க முடியாது எனவும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.