அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு
அரச சேவையில் சம்பள கட்டமைப்பை திருத்தியமைப்பதன் மூலம் சம்பள திருத்தத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
அதன்படி, அரச சேவையில் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.15,750 அதிகரித்து ரூ.24,250-லிருந்து ரூ.40,000-ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி, தற்போதுள்ள தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும் என்றும், அடிப்படை குறைந்தபட்ச சம்பளத்திற்கு ரூ.8,250 நிகர அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறைந்தபட்ச சம்பளம்
இதில் நீதித்துறை சேவைகள், மாவட்ட நிறுவனங்கள், சட்டப்பூர்வ சபைகள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் முப்படை அதிகாரிகளின் சம்பளமும் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.15,750 அதிகரிப்பதோடு, வருடாந்திர சம்பள உயர்வின் மதிப்பு 80% அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அதன்படி, குறைந்தபட்ச வருடாந்திர சம்பள உயர்வு ரூ.250 ஐ ரூ.450 ஆகவும், ரூ.500 சம்பள உயர்வு ரூ.900 ஆகவும் உயர்த்தப்படும் என்று முன்மொழியப்பட்டது.
110 பில்லியன் ஒதுக்கீடு
இந்த சம்பள உயர்விற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ.325 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதன்படி, இந்த சம்பள உயர்வு பல கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளதாகவும், ஆரம்ப நிகர சம்பளமான ரூ. 5,000 மற்றும் மீதமுள்ள 30% ஏப்ரல் 2025 முதல் செயல்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள 70% ஜனவரி 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் சம பாகங்களாக வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
எனவே, 2025 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வுக்காக ரூ. 110 பில்லியன் ஒதுக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
