அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான தகவல்
12,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26.11.2025) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கல்வித் தகைமைகளுக்கு அமைய வேலையற்றுள்ளவர்களின் எண்ணிக்கையில் க.பொ.த சாதாரண தரத்திற்குக் கீழுள்ளவர்கள் ஒரு இலட்சத்து மூவாயிரத்து முன்னூற்று எட்டு (103,308) பேர் உள்ளனர்.
வேலையின்மையால் பாதிப்பு
அத்துடன் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் தொண்ணூற்று ஓராயிரத்து நானூற்று ஐந்து (91,405) பேர் எனவும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த ஒரு இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து தொளாயிரத்து என்பத்து நான்கு (128,984) பேர் இவ்வாறு வேலையற்றுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமைகளைக் கொண்ட 42,254 பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சேர்ப்புப் பணிகள்
ஏற்கனவே 12,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனேயே ஆட்சேர்ப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |