அரச நிறுவனங்களை மூடுவது தொடர்பான தீர்மானம் - பிரதமர் வெளியிட்ட கருத்து..!
எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (30) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபோன்ற முடிவுகள் தனிப்பட்ட விருப்பங்கள் மட்டுமே என்றும், அரசு நிறுவனத்தை மூடுவது அல்லது முதலீட்டுக்குச் செல்வது அல்லது நிர்வாகத்தை மட்டும் ஒப்படைப்பது போன்ற பல்வேறு வழிமுறைகள் தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.
பெரிய மாற்றங்கள்
பெரிய மாற்றங்களைச் செய்யாமல் தினசரி வருமானத்தை அதிகரிக்கக்கூடிய நிறுவனங்கள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக விவாதிக்கப்பட்டு அமைச்சகங்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மறுசீரமைக்கப்படவுள்ள நிறுவனங்களை இலாபமாக மாற்றுவது இலக்குகளில் ஒன்று எனவும், தனது முன்மொழிவுகளை நிறைவேற்ற அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

