காலிங்கன் வரலாற்றை சீரழித்தது போல தற்போதைய அரசாங்கம் சீரழிக்கின்றது! சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீரழிந்தது அதேபோல தற்போதைய அரசாங்கம் விவசாய பாரம்பரியத்தை சீரழித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு கிளர்ச்சி காலத்தில் பலன் தரக்கூடிய பல மரங்கள் அழிக்கப்பட்டதாகவும் காலிங்கன் யுகத்தில் இந்நாட்டின் வரலாற்று பாரம்பரியம் அழிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
வெடிப்புகளை நிறுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ் கையில் எடுக்கும் சமையல் எரிவாயு கொள்கலன்கள் கூட வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதுமாத்திரமின்றி திரவ உர கொள்கலனும் வெடிக்கின்றன.
கொண்டுவரப்பட்ட திரவ உரம் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு துர்நாற்றம் உடையது. துர்நாற்றம் அலரி மாளிகை, அரச தலைவர் மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தினால் உணர முடியாது.
பொதுமக்களின் துயரங்களை உணரும் நாடி அரசாங்கத்திற்கு கிடையாது. சீனி மோசடி, எண்ணெய் மோசடி, கொரோனா மோசடி போன்ற பாரியளவிலான ஊழல், மோசடிகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
தற்போது இலங்கையின் ஊழல் விவகாரத்தில் மிகவும் கீழ்தரமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.