60 வருடங்களாக அரசினால் புறக்கணிக்கப்படும் வீதி : நீதி கோரி நீதிமன்றில் வழக்கு
யாழில் 60 வருடங்களாக புனரமைக்காமல் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுவரும் மீசாலை - தட்டாங்குளம் வீதியை புனரமைக்குமாறு உத்தரவிடக்கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று (12) தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கின் பிரதிவாதிகளாக சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குறித்த வீதியில் வசித்துவரும் வி.வாகீசனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படவில்லை
மீசாலை - தட்டாங்குளம் வீதி 350க்கும் மேற்பட்ட யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவர்களும், ஏராளமான பொதுமக்களும் பிரயானம் செய்யப் பயன்படுத்தும் பிரதான வீதியாக காணப்படுகின்றது.
இந்த வீதி கடந்த 60 வருடங்களுக்கு மேலாக எந்தவிதமான புனரமைப்பும் செய்யப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் சகல அரச திணைக்களங்களுக்கும் தெரியப்படுத்தியும், புனரமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருந்த போதும் எந்தவிதமான முன்னேற்றகரமாண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் குறித்த வீதியினை புணரமைப்பதற்காக மனுதாரருக்கு முன்னாள் பிதேச சபை செயலாளர் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தினால் PSDG நிதியில் 18 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடிதம் மூலம் அறியத்தந்தும் இன்றுவரை எந்தவிதமான புனரமைப்புப் பணிகளும் நடைபெற்றிருக்கவில்லை.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
இவ்வாறு குறித்த வீதி புனரமைப்பிற்கான ஆக்கபூர்வமான எந்த ஒரு நடவடிக்கைகளும் முன்னொடுக்கப்படாததை அடுத்து மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவழக்கில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி பிரவின் பிரேமதிலகவும், சிரேஸ்ட சட்டத்தரணிகளான தனுக்க ராகுமத்த மற்றும் றிசித் அபேசூரிய ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.
இவ்வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மாதம் 4,5 ஆம் திகதிகளில் நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் மனுதாரர்களின் சட்டத்தரணிகளால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
