வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி
பயன்படுத்தப்பட்ட வாகன இறக்குமதிக்கான வரி மற்றும் மதிப்பீட்டு முறையைத் திருத்த இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மீறி, வாகன இறக்குமதிகளுக்கு வரிகளும் மதிப்பீடுகளும் விதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பில் (WTO) முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சகமும் இலங்கை சுங்கத்துறையும் இந்தப் முறைப்பாட்டை தீவிரமாக எடுத்துக்கொண்டு, தீர்வுகளைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உரிய திருத்தங்கள்
2016 முதல் நடைமுறையில் உள்ள வரி விதிப்பு முறையின்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய பரிவர்த்தனை மதிப்பானது, இறக்குமதி செய்யப்படும் நாட்டில் உள்ள ஒரு புதிய வாகனத்தின் விலையில் (வரி நீங்கலாக) குறைந்தபட்சம் 85 வீதமாக இருக்க வேண்டும்.

அதன்படி, இலங்கையில் உள்ள வரி விதிப்பு முறை சர்வதேச வர்த்தகச் சட்டங்களுடன் முழுமையாக ஒத்துப்போகவில்லை என்பதை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கான உரிய திருத்தங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தின் வருவாய்
இருப்பினும், தற்போதைய வரி முறையை ஒரேயடியாக நீக்கினால் அரசாங்கத்தின் வருவாய் கணிசமாகக் குறைந்துவிடும் என்பதால், படிப்படியான திருத்த முறையை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக நிதி அமைச்சக மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |