ஜி.எஸ்.பி பிளஸை இழக்கும் நிலையில் இலங்கை! எச்சரிக்கும் ரணில்
தொழிற்சங்களை முடக்குவது மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்வது போன்ற விடயங்களை மேற்கொள்வதால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இல்லாமல் செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில்,
ஜோசப் ஸ்ராலின் போன்ற ஐரோப்பிய ஒன்றித்தால் நன்கு அறியப்பட்டவர்களை சட்டவிரோதமாக கைது செய்வது நாட்டிற்கே தீமையாக அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நிதி அமைச்சின் கீழ் அரையாண்டு நிதி மீளாய்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஜுன் மாதமும் நிறைவடைந்துள்ளது. ஆகவே அதனுடன் ஜிஎஸ்பி பிளஸ் கொள்கை தொடர்பிலும் அரசாங்கம் தெளிவுபடுத்துமா என கேட்க விரும்புகின்றேன்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையை அடுத்து விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். எனினும் நேற்று இடம்பெற்ற விடயம் முக்கியமானது.
தொழிற்சங்கத் தலைவரான ஜோசப் ஸ்ராலினை ஐரோப்பிய ஒன்றியம் நன்கு அறியும். 2016ஆம் ஆண்டு இது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு செல்கையில், இவருடனும், வர்த்தக வலைய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். இந்த விடயத்தை, சர்வதேச தொழிலாளர் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் இதனை அவதானித்து கொண்டிருக்கின்றது.
இந்த இடத்தில் சட்டம் ஒன்று இல்லை. ஆகவே இது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் விரைந்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, பொலிஸார் தொடர்பில் குழு ஒன்றை நியமியுங்கள்.
இல்லாவிடின் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நல்ல விடயங்களும் இதனால் இல்லாமல் போகும் என்றார்.