மகிழ்ச்சி தகவல் - 15 இலட்சம் ரூபாயினால் குறைந்துள்ள வாகனங்களின் விலை
இலங்கையில் வாகனங்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், வாகனங்களை வாங்குபவர்களுக்கு இதுவே சிறந்த நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ (Arosha Rodrigo) தெரிவித்துள்ளார்.
நிதிக் கொள்கைகள் மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக வாகனங்களின் விலை குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் இறக்குமதியாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், வரி மாற்றங்கள் இல்லாவிட்டாலும், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஜப்பானிய ஏலச் சந்தைகளில் இலங்கைக்குத் தேவையான வாகனங்கள் அதிக அளவில் நிரம்பல் செய்யப்படுவதால், ஏல விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
அத்துடன், உள்ளூர் இறக்குமதியாளர்களும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களைக் கொண்டு வந்துள்ளதால், சந்தையில் தேவைக்கு அதிகமாக வாகனங்களின் இருப்புக் குவிந்துள்ளது.
இதன் காரணமாக, பொதுவாக ஒவ்வொரு வாகனத்தின் விலையும் 10 இலட்சம் ரூபாய் முதல் 15 இலட்சம் ரூபாய் வரையில் குறைவடைந்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான பாதீடு
குறிப்பாக, இறக்குமதியாளர்கள் வங்கிக் கடன்களை அடைப்பதற்காகவும், இருப்புகளைக் குறைப்பதற்காகவும் சிலர் நஷ்டத்திற்கு கூட வாகனங்களை விற்கிறார்கள். எனவே, இது வாகனங்களை வாங்குபவர்களுக்குச் சிறந்த நேரமாக உள்ளது.

வரவிருக்கும் பாதீட்டில், பேருந்துகள் மற்றும் பாரவூர்திகளின் இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டும் எனவும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது மூன்று ஆண்டுகளுக்குட்பட்ட வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவது, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குட்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எங்களது சங்கம் முன்வைக்கின்றது.
வாடிக்கையாளர்கள் பொறுப்புள்ள நிறுவனங்களிடமிருந்து உத்தரவாதத்துடன் வாகனங்களை வாங்க வேண்டும் என்றும், இறக்குமதியாளர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் ஏலத் தாள் (Auction Sheet) மற்றும் ஏல விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகவும் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்