மனைவியுடன் சேர்ந்து ஹவாய் தீவு நோக்கி பயணமாகவுள்ள ஜோ பைடன் - காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய தீர்மானம்!
ஹவாய் தீவில் தற்போது காட்டுத்தீ பரவி பாரிய சேதங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் ஹவாய் தீவு நோக்கி பயணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹவாய் தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவான மவுய் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ உருவாகியது.
இடத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன் 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
ஒரு நகரமே தீக்கிரை

இந்த காட்டுத்தீயால் மவுய் தீவு கடும் சேதமடைந்து ஒரு நகரமே தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"இந்த நிலையில் நானும் எனது மனைவியும் (ஜில் பைடன்) ஹவாய் செல்ல இருக்கிறோம், அங்கு செல்லும் நாங்கள் மவுய் காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அங்கு செல்ல இருக்கும் ஜோ பைடன் "எங்களால் மீட்புப்பணி, சுத்தப்படுத்தும் பணிகளுக்கு தடை ஏற்படுவதை விரும்பவில்லை" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமல்லாமல் அமெரிக்கா ஹவாய் தீவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என ஹவாயின் ஆளுநர் ஜோஷ் கிரீனிடம் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்த ஜோ பைடன், ஹவாய் மக்களுக்கு தேவைப்படும் ஒவ்வொன்றும், அவர்களை சென்றடையும் என்றும் கூறியுள்ளார்.
தகவல்கள் கண்டறியப்படவில்லை

மவுய் தீவில் காட்டுத் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இன்னமும் முழுமையான தகவல்கள் கண்டறியபடவில்லை என்றும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பழமையான லஹைனாவில் ஏற்பட்ட தீ 85 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜோ பைடன் இதற்கு முன்னர் சூறாவளி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை செய்துள்ளார்.
ஆனால், ஒஹியோவில் ரெயில் கவிழ்ந்து நச்சு ரசாயனம் வெளியேறியது, அந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.