நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை
நாட்டில் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களுடன், கொழும்பு, கம்பஹா, மொனராகல மாவட்டங்களும் இந்த எச்சரிக்கைக்குள் அடங்குகின்றன.
அதன்படி, நாளை (03.05.2026) பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை, 'எச்சரிக்கை' மட்டத்தில் நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம்
இது வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இணைந்து மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தை அதிகரிக்கும் சூழலை குறிக்கிறது. இந்த நிலைமையில், மக்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என சுகாதார அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பதும், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவதும் உடல் சோர்வு, தலைசுற்றல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதிக வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதன் காரணமாக உடலில் உப்புச் சத்து சமநிலை குலைந்து, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளும் உருவாகலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இதனால், மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், குளிர்ச்சியான இடங்களில் தங்குதல், இலகுவான உடைகள் அணிதல் மற்றும் வயதானவர்கள், குழந்தைகள் போன்ற ஆபத்துக்குட்பட்ட குழுக்களை சிறப்பாக கவனித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வெப்பத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டியது மிக அவசியமானதாகும் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |