முற்றாக உடைந்த நாயாறு பாலம் - தவிக்கும் மக்கள்: போக்குவரத்து தடை
முல்லைத்தீவில் நாயாறு பாலம் உடைந்தமை மற்றும் வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளதோடு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால் முல்லைத்தீவிலிருந்து மணலாறு பகுதிக்கு, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு, முல்லைத்தீவிலிருந்து கோக்கிலாய் பகுதிக்குமான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இருவரைக் காணவில்லை எனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2ஆயிரத்து 80 பேர். 24 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு ஆயிரம் குடும்பங்கள் உறவுகள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது