நாட்டில் நாளை முதல் அதிகரிக்கும் மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நாளை (09) முதல் 12ஆம் திகதி வரையில் மழை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (08.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லமீற்றர் தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓரளவு பலத்த மழை
மேல், சபரகமவ, மத்திய மாகாணங்கள் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |