இடியுடன் கூடிய கனமழை - கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (17.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை
இந்நிலையில், கொழும்பில் நேற்று (16) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவசர பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான காற்று, இடி மற்றும் மின்னலுடனான மழை பெய்யக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து உடனடி நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
