கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கங்களுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த அறிவிப்பின்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |