யாழ்ப்பாண நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - வெளியான பின்னணி
யாழ்ப்பாணம் நகரம் (Jaffna town) நெரிசல் மற்றும் நெருக்கடி கொண்டதாக மாறியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதனை ஒழுங்கமைக்க - சீரமைக்க வேண்டிய தேவை பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து தரிப்பு நிலையத்தை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நெரிசல் மற்றும் நெருக்கடி
அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் நகரம் நெரிசல் மற்றும் நெருக்கடி கொண்டதாக மாறியுள்ளது.
இதனைத் தவிர்க்க நெடுந்தூர, குறுந்தூர பேருந்துச் சேவைகள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பொதுப்போக்குவரத்தை மக்களின் தேவைக்காக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம்.
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து செயல்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடமாற்றம்
யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பு நிலையம் தொடர்பில் தற்போது எதிர்கொள்ளப்படும் இடர்பாடுகள் தொடர்பாகவும் இதனை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடமாற்றம் செய்வதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளின் கருத்துக்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இது தொடர்பில் நேரடி கள விஜயம் மேற்கொண்டு மேலதிக தீர்மானங்கள் எட்டப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபையினர் தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
