வெளிநாடொன்றை புரட்டிப் போட்ட சூறாவளி...! நூற்றுக்கணக்கானோர் பலி
புதிய இணைப்பு
பிலிப்பைன்ஸைத் தாக்கிய 'கல்மேகி' புயலுக்கு 114க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (05) உருவான இந்தப் புயல் இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான புயல் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புயல், பிராந்தியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபுவில் உள்ள முழு நகரங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அங்கு மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 127 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
முதலாம் இணைப்பு
பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 66 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் செபுவின் தெற்கே உள்ள மின்டானாவ் தீவில் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட பின்னர் விபத்துக்குள்ளான இராணுவ உலங்கு வானூர்தியில் பயணித்த ஆறு பணியாளர்களும் அடங்குவர்.
இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
விமானங்கள் இரத்து
வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
மீட்புப் பணியாளர்கள் உதவி வழங்குவதற்கு முன்பு வானம் தெளிவாகும் வரை காத்திருக்கிறார்கள் என்று சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ தெரிவித்துள்ளார்.
"சாலையில் உள்ள குப்பைகள் மற்றும் கார்கள் தான் சவால். நாங்கள் அகற்ற வேண்டியவை நிறைய உள்ளன அவர் குறிப்பிட்டுள்ள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வியட்நாம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |