ஆர்ப்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட 83 பேர் பிணையில் விடுதலை
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கத்தினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைதுசெய்யப்பட்ட 83 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சோசலிச இளைஞர் அமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை கலைப்பதற்கு சிறிலங்கா காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, சட்டத்தை மீறியதாக 84 பேரை தமது பொறுப்பில் எடுத்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காயமடைந்த சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிணையில் செல்ல அனுமதி
இந்த நிலையில், சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் இரண்டு தேரர்கள் இன்றைய தினம் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது அவர்களை பிணையில் செல்ல நீதிவான் அனுமதியளித்துள்ளார். இதேவேளை, ஏனைய 80 பேரும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உடனடி அறிக்கை கோரல்
இதேவேளை, சோசலிச இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் போது 83 பேர் கைதுசெய்யப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி அறிக்கையொன்றை கோரியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை நாளை காலை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.