மலையக சிறுமியின் மரணத்தை அரசியலாகும் சில தமிழ்த் தலைமைகள்- பாரிய குற்றசாட்டு!
அண்மைக்காலமாக அரசியல் தலைவர்களாலும் சமூகங்களாலும் மக்களாலும் பேசுபொருளாக இருக்கின்ற ஒரு விடயம் தான் மலையக சிறுமி ஹிசாலினியின் மரணம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார் .
இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டு பின்னர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி பரிதாபமாக மரணம் அடைந்த விடயம் உண்மையில் தண்டிக்கப்படக் கூடிய, அந்த அப்பாவி சிறுமிக்கு நியாயமான தீர்வு கிடைக்க நீதி கிடைக்க வேண்டிய ஒரு விடயமாகும்.
இதற்காக நாட்டில் உள்ள அனைவரும் இன்று அழுத்தம் கொடுத்து, எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற கூடாது என்பதற்காக மிக உறுதியாக போராடிக் கொண்டிருக்கும் சூழலில், இதனை தங்களுக்கு அரசியலாக்கி கொண்டு குறிப்பாக எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களையும் அதேபோன்று தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து செல்கின்ற சில தலைவர்கள் இஸ்லாமிய மக்களின் மத்தியில் அரசியல் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்துகின்றமை வேதனையான விடயம் .
கடந்த நல்லாட்சி அரசு காலத்தில் இவர்களின் நடவடிக்கை பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியது. அதே போன்று மீண்டும் பாரதூரமான சிறுமியின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய முனைவது மிக வேதனைக்குரிய விடயமாகும்.
உண்மையில் மலையகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி வறுமையின் காரணமாக வேலைக்கு செல்வதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய மேட்டுக்குடி தலைமைகள், எவ்வாறு அந்த சிறுமியை வேலைக்கு அமர்த்தியது என்றும் மரணத்திற்கு காரணம் என்ன என்பதையும் இலங்கையின் நீதித்துறை விசாரணை செய்ய வேண்டும்.
அந்த பாதிக்கப்பட்ட சிறுமி உண்மையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார? அல்லது வன்கொடுமை நடந்திருக்கின்றதா? சிறுமி கொலை எவ்வாறு நடந்தது என்று விசாரணை செய்து சட்டத்தின் முன்பாக குற்றவாளி நிறுத்தப்படவேண்டும் . இதில் யாரும் அரசியல் செய்ய முன்வரவில்லை. குறிப்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்து இருந்தனர்.
உண்மையில் மகளிரணியின் நோக்கம் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற கூடாது என்பதற்க்காக . இன்று மலையக மக்கள் வீடில்லாமல் உட்கட்ட வசதியில்லாமல் அவர்களுக்கான கல்வி வசதி இல்லாமல் சிரமப்படும் சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் இந்த நாட்டில் முற்றுமுழுதாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பல சம்பவங்கள் நாட்டில் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக வித்தியா படுகொலை தொடக்கம் பல படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. வித்தியாவின் மரணத்திற்கு நீதி கோரி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வீதியில் இறங்கி போராடி இருந்தது.
இது தெரியாத சில அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரை விமர்சனம் செய்ய எந்தவித அருகதையும் அற்றவர்கள். யுத்த காலத்தில் பல கொலைகள் ஏற்றுக்கொள்ள முடியாத மனிதப் படுகொலை இடம்பெற்றது. யுத்தத்தினால் எதனையும் சாதிக்க முடியாது மனித குலத்துக்கு எதிராக மனிதர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமை வேண்டாம் என்பதற்க்காக ஜனநாயக பாதைக்கு திரும்பினோம்.
யுத்த காலத்தில் களத்தில் இருக்காமல் மக்கள் மத்தியில் இன்னல்கள் இடம்பெற்ற போது இன்னல்களுக்கு முகம் கொடுக்காமல் அனுமதிக்காமல் வெளிநாடுகளில் சௌபாக்கியமாக இருந்துகொண்டு அரசியலுக்காக கருத்தைச் சொல்பவர்கள் முதலில் தாங்கள் சென்ற பாதை சரியானதா என்று தீர்மானிக்க வேண்டும்.
தங்களுக்கு எந்த கட்சி தீர்மானிப்பது என்று தெரியாமல் மாறி மாறி அரசியல் செய்து கொண்டு இருக்கின்ற அரசியற் தலைமைகள் மக்களை வழிநடத்த தெரியாது. நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக விமர்சிப்பவர் அல்ல ஆனால் மக்கள் நலன் சார்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்கள்படும் இன்னல்களை தீர்ப்பதற்காக சமூக ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு திட்டங்கள் இல்லாமல் எந்த முன்னெடுப்பும் இல்லாதவர்கள் மக்கள் நலன் சார்ந்து என்ன செய்துள்ளனர் .
இவ்வாறான சூழலில் மலையகத்தை சேர்ந்த சிறுமியின் மரணத்திற்கு நியாயமான தீர்வு வேண்டும் சிறுமியை வேலைக்கு அமர்த்தியது முதலாவது குற்றமாக இருக்கின்றது. ஆகவே அந்த சிறுமியின் படுகொலைக்கான அல்லது தற்கொலைக்கான காரணங்களை கண்டறிவதற்காக நீதியான விசாரணை நடத்த வேண்டும் .
இந்த விடயத்தில் எந்தவிதமான பிழையான அரசியலும் இல்லை என்பதை தெளிவாகச் சொல்வதுடன் நாங்கள் மக்கள் சார்ந்து செயற்படுகின்றோம் தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கின்றோம்
குறிப்பாக சந்திரகாந்தன் சிறைச்சாலையில் இருக்கின்ற போது மக்கள் முதன்மைநாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .