வெள்ளிக்கிழமைகளில் வீட்டுத்தோட்டம்: அரச ஊழியர்களுக்கு விடுமுறை வாய்ப்பு
வெள்ளிக்கிழமைகளில் வீட்டுத் தோட்டம்
அரச ஊழியர்கள், வெள்ளிக்கிழமைகளில் வேலையிலிருந்து விடுபட்டு, வீட்டுத் தோட்டம் மற்றும் பிற நிலங்களில் பயிரிடுவதற்கான விருப்பத்தை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
அரச அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெள்ளிக்கிழமை வேலையில் இருந்து விடுபட விரும்பும் பொது ஊழியர்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது பிற நிலங்களிலோ உணவுப் பயிரிடுவதற்கு அந்த விடுமுறை நாள் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய விவசாயத் துறையிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
இந்த யோசனை தொடர்பில் விவசாய திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அரச அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமைகளில் சில அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படலாம் என்ற அடிப்படையில் இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன.
