எப்போதுவரை மின்வெட்டு இல்லை - வெளியானது தகவல்
டொலர் நெருக்கடி அதனால் எரிபொருள் கொள்வனவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நாடு பெரும் இடரை எதிர் நோக்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின் விநியோகம் எப்போது வேண்டுமானாலும் நாளொன்றுக்கு சில மணி நேரங்களுக்கு துண்டிக்கப்படும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் (18) வரை மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே(Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்திற்கு 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த 3000 மெற்றிக் தொன் டீசல் வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 18ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 22ம் திகதி வரை தமக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கும் நோக்குடன், எரிசக்தி அமைச்சுடன் நாளைய தினம் (17) கலந்துரையாடல்களை நடத்த, தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட் நிலைமைக்கு மத்தியில், மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு மக்களுக்கு நிவாரண காலம் அறிவிக்கப்பட்டமையினால், தமக்கு 44 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு மின்சார பயன்பாட்டாளர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகையை, தாம் தற்போது அறவிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 300 மெகா வோட் மின்சாரத்தை விநியோகிக்கும் மூன்று கட்டமைப்பு செயற்பட்டு வருவதாகவும், அதில் ஒரு கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறு செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை, எதிர்வரும் 22ம் திகதி வழமைக்கு கொண்டு வர முடியும் என பொறியியலாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை, வறட்சி காலங்களில் நீர் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக, மின்சாரத்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஸவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில், எதிர்வரும் 22ம் திகதி வரை எரிசக்தி அமைச்சு, தமக்கு தேவையான எரிபொருளை வழங்காத பட்சத்தில், மின் விநியோக தடை ஏற்படுத்தப்படுவது குறித்து தீர்மானமொன்றை எட்டுவதற்கான நிலைமை தமக்கு ஏற்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.