அந்த அளவுக்கு நான் தாழ்ந்து போய் விடவில்லை -மைத்திரியின் அறிவிப்பு
அதிபர் மாளிகையில் இருக்கும் உடைந்து போன தொலைக்காட்சி மற்றும் ஊடகப்பிரிவில் இருந்த புகைப்பட கருவிகள் உட்பட பொருட்களை எடுத்துச் செல்லும் அளவுக்கு தான் தாழ்ந்த நிலைக்கு சென்றவன் அல்ல என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் இன்று நடந்த ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் அதிபர் இதனை கூறியுள்ளார்.
அதிபருக்கு சொந்தமானது அல்ல
அதிபர் செயலகத்தில் இருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருப்பதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நான் அந்த கணக்காய்வு அறிக்கையை பார்க்கவில்லை.
அதிபரின் ஊடகப்பிரிவு மற்றும் அதிபர் செயலகத்தில் உள்ள பொருட்கள் எதுவும் அதிபருக்கு சொந்தமானது அல்ல. அவற்றுக்கு பொறுப்பான அதிகாரிகள் இருக்கின்றனர்.
கோட்டாபய ராஜபக்சவின் பணிக்குழுவிடம் ஒப்படைப்பு
நான் அறிந்த வரையில் நான் அதிபராக இருந்த சமயத்தில் அதிபரின் ஊடகப்பிரிவில் இருந்த அனைத்து பொருட்களும், அன்றைய ஊடகப்பிரிவின் பணிப்பாளர், கோட்டாபய ராஜபக்சவின் பணிக்குழுவிடம் எழுத்துமூலமான விபரங்களுடன் ஒப்படைத்தார்.
அந்த இடத்தில் இருந்த பொருட்கள் காணவில்லை என்றால், அது பற்றி விசாரணை நடத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன். நான் அந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் எனவும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.