வாலை பிடித்து பதவிகளை பெற்றுக்கொள்ள நான் தயாரில்லை - பிரபல நடிகை அதிரடி
நான் தனிப்பட்ட இலாப நோக்கங்களை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா சமன்மலி குமாரசிங்க ( Geetha Samanmali Kumarasinghe) தெரிவித்துள்ளார்.
வாராந்த செய்தி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேள்வி- நீங்கள் அதிருப்தியில் இருக்கின்றீர்களா?
பதில் - எனது மனசாட்சிக்கு இணங்க கூறுவதாயின் நான் அரசாங்கம் குறித்து அதிருப்தியில் இருக்கின்றேன். மிகவும் அதிருப்தியில் இருக்கின்றேன். நான் யோகி இல்லையே.
கேள்வி - நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அரசாங்கத்தின் மீது ஏன் அதிருப்தியில் இருக்கின்றீர்கள்?.
பதில்- நான் தனிப்பட்ட இலாப நோக்கங்களை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பது தற்போது கௌரவத்தை விட அகௌரவமாக மாறியுள்ளது. 12 ஆண்டுகளாக நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அரசியலுக்காக நான் எனது சுவிஸர்லாந்து குடியுரிமையை இரத்துச் செய்தேன்.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியில் நான் உட்பட 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 50 பேருக்கு மாத்திரம் அமைச்சு பதவிகளை வழங்கியதுடன் எனக்கு வழங்கவில்லை. இதற்கான காரணம் எனக்கு தெரியும்.
கேள்வி - உங்களால் அந்த காரணத்தை வெளியிட முடியுமா?.
பதில் -நான் தற்போது இந்த காரணத்தை ஊடகங்களுக்கு வெளியிட மாட்டேன். நான் கொள்கை ரீதியான அரசியல்வாதி. இதனால், எனக்கு வருத்தம் இருக்கின்றது. என்னை தரம் தாழ்த்தியுள்ளனர்.
எனக்கு எதுவும் இல்லையென்றாலும் எனக்கு வாக்களித்த காலி மக்களுக்கு நான் சேவை செய்வேன். தென் மாகாணத்தின் ஒரே ஒரு பெண் நாடாளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் என கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு கீதா குமாரசிங்க காலி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு நீண்ட அரசியல் வரலாறு உள்ளது.
கீதா குமாரசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய உரை ஒன்றை நிகழ்த்தியதுடன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
கூட்டு எதிர்க்கட்சியில் தான் உட்பட மூன்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் எனவும் அவர்களில் இரண்டு பேர் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாகவும் தான் மாத்திரம் கூட்டு எதிர்க்கட்சியில் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அவ்வாறு செல்லாத தனக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என்றாலும் எவருடைய வாலை பிடித்தாவது பதவிகளை பெற்றுக்கொள்ள தான் தயாரில்லை எனவும் கீதா குமாரசிங்க குறிப்பிட்டிருந்தார்.