எதிர்க்கட்சியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை : ஹர்ஷ டி சில்வா பகிரங்கம்
எதிர்க்கட்சியிலிருந்து தன்னை வெளியேற்றச் சில குழுக்கள் முயற்சிப்பதாகவும் தாம் ஒருபோதும் எதிர்க்கட்சியிலிருந்து விலகப்போவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், எமது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அரசியலில் ஈடுபடவில்லை, இலங்கையை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவே நான் பொதுவாழ்வுக்கு வந்தேன்.
தற்போதைய அரசாங்கம்
குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தாம் ஒருபோதும் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில்லை. என்னை எதிர்க்கட்சி முகாமிலிருந்து வெளியேற்றச் சில குழுக்கள் முயற்சிக்கின்றன அது ஒருபோதும் நடக்காது.

எதிர்காலத்தில் எமது அரசியல் பயணமானது தற்போதைய முகாமுக்குத் தலைமைத்துவத்தை வழங்குவதை நோக்கியே அமையும்.
தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தெளிவான பொருளாதாரப் பார்வை அரசிடம் இல்லை.
உலகிற்குத் திறந்த கதவுகளைக் கொண்டிராத மூடிய கொள்கைகள் மற்றும் குறுகிய சிந்தனைகள் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது, அதன் விளைவுகள் எதிர்காலத்தில் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு
அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகளை ஏற்படுத்தவே இத்தகைய வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது.

பொருளாதார ரீதியாக வளமான இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதுடன், அனைத்தையும் எதிர்க்காமல் சிறந்த முடிவுகளுக்கு ஆதரவளிக்கும் புதிய அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்கப் போகின்றோம்.
இலங்கைக்கு ஒரு புதிய யுகம் தேவை, நாட்டுக்காகப் பாரிய பொறுப்புகளை ஏற்கத் நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |