24 ஆவது ஆண்டு நிறைவில் ibc தமிழ் வானொலி
ஊடக வரலாற்றில் தனித்துவமான பின்னணியைக் கொண்ட ஒரு வானொலியாக புலம்பெயர் தேசமெங்கும் பரந்து வாழும் பல்லாயிரம் தமிழ் உள்ளங்களில் அழியாத இடத்தைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருப்பது ibc தமிழ் வானொலி .
இன்று ibc தமிழ் வானொலியானது தனது 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.தாயக தேசத்தின் அனைத்து அம்சங்களையும் செய்திகளாகவோ ,ஊர்பற்றிய நினைவுகளாகவோ ஆலய உற்சவங்களாகவோ அத்தனையையும் அனைத்துலக தமிழ் மக்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள வைப்பது ibc தமிழ் வானொலி .
அது மட்டுமல்ல இயற்கை அனர்த்தங்களின்போது அல்லலுற்ற மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட அழைப்பு விடுத்து அரும்பணியாற்றியதை மறந்துவிடமுடியாது . அதற்கும் மேலாக தற்போது ஒட்டு மொத்த உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா காலத்தில் வீடுகளில் முடக்கப்பட்ட அத்தனை உறவுகளையும் ஆற்றுப்படுத்திக்கொண்டிருக்கும் அளப்பரிய சேவையை செய்து கொண்டிருக்கிறது .
இந்த வானொலியானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை வெறும் பொழுதுபோக்கு சாதனமாக இல்லாமல் பொறுப்பான கடமைகளை செய்து வருவதை அனைவரும் அறிவார்கள் .
எந்த ஒரு வானொலியிலும் இல்லாத தமிழ்ப்பயன்பாடும் உச்சரிப்புத் தெளிவும் இதன் உச்சமெனலாம் .சிறுவர்கள்,இளையோர், முதியோரின் அனைத்து வயதினருக்குமேற்ற நிகழ்ச்சி ஒழுங்கமைப்பும் ,இலைமறை காயாகத் திகழும் கலைஆர்வலர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கும் களமும் அதிசிறப்பு .
எடுத்த காரியம் யாவினும் வெற்றி எனும் வார்த்தையை மகுட வாசகமாய்த் தாங்கி உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழருக்கான பலம் வாய்ந்த ஊடகமாய் தன்னைக் கட்டியெழுப்பும் முனைப்போடு காற்றலைப்பரப்பில் அடியெடுத்து வைத்தது ஐபிசி தமிழ் வானொலி இன்று இலட்சோப லட்ச தமிழர்களின் அபிமான வானொலி எமதென்ற பெருமையை கைவசப்படுத்தியிருக்கிறது
அதே நேரம் காத்திரமான நிகழ்ச்சிகளை படைத்து தனது நேயர்களுக்கு ஏதோ ஒரு வானொலி போல இல்லாமல் தனது நேயர் சொந்தங்களின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர் போல் இன்று ஒவ்வொரு வீடுகளிலும் கம்பீரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது ஐபிசி தமிழ் வானொலி .

ஈர்வையான குரலும் அறிவும் ஆளுமையுள்ள அறிவிப்பாளர்கள் ஐபிசி தமிழ் வானொலிக்கு தனிச் சிறப்பாய் இருக்கிறார்கள் .உறவுகளை இழந்து தாய் நிலத்தை பிரிந்து புலம்பெயர்ந்த நாடுகளில் மண்ணையும் மக்களையும் தாய் மொழியையும் விட்டு வந்திருக்கும் தமிழர்களுக்கான தனிப் பெருந்துணை ஐபிசி தமிழ் வானொலி .
ஆரம்பம் முதல் இன்றைக்கு வரைக்கும் ஐபிசி தமிழ் வானொலியின் சின்ன சின்ன மாற்றங்கள் முதற்கொண்டு அதன் பங்கு , பணி , உழைப்பு , பொறுப்பு , வளர்ச்சி என எல்லாவற்றையும் அதன் நேயர்கள் நன்கு அறிவார்கள் . நேயர்களுக்கும் வானொலிக்குமான இந்த நெருக்கம் தான் ஐபிசி தமிழ் வானொலியின் பெரு வெற்றி .
1997 ஜூன் 09ஆம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது ibc தமிழ் வானொலிச்சேவை . அப்போது இதன் நிறுவுநராக இருந்தவர் ஏசி .தாசியஸ் அவர்கள் . பிரித்தானியா , ஐரோப்பா என்று இதன் ஆரம்ப ஒலிபரப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு உலகெங்கும் வாழும் தமிழர்களை Radio.ibctamil .com எனும் இணையத்தளம் வழியாகவும் smart டிவைஸ் களின் செயலிகளினூடாகவும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது .
பிரித்தானியாவில் இதன் தாயக கலையகம் அமைந்திருக்கும் நிலையில் ஊர் திரும்பியிருக்கும் உலகத்தமிழான ஐபிசி தமிழ் வானொலி தாய் மண்ணுக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கும் பொருட்டு தனது கலையகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவி அங்கிருந்தும் தாய்க் கலையகத்தில் இருந்தும் ஒலிபரப்பு சேவையை வழங்கி வருகிறது.
ஆரம்பம் முதல் இன்று வரை நிர்வாகமும் அதன் பணிப்பாளர்களும் மாறி வந்தாலும் ஐபிசி தமிழ் வானொலி எனும் நாமம் எவ்வித மாற்றங்களும் இன்றி அப்படியே மனங்களில் நிற்கிறது . இன்று அதன் நிறுவன தலைவராக இருக்கும் திரு. கந்தையா பாஸ்கரன் அவர்களின் பெரும் தரிசனமாக உலகெங்கும் வாழும் ஒட்டு மொத்த தமிழருக்கான தனிப் பெரும் ஊடகமாக உருவாகும் இலக்கினை அடைதலை தனது தார்மீக கடமையாய் சிரமேற் கொண்டு செயல்படுகிறது .
தற்பொழுது இதன் நிறைவேற்று பணிப்பாளராக திரு . நிராஜ் டேவிட் அவர்களும் வானொலிப்பணிப்பாளராக திரு. சத்தியமூர்த்தி சதீசும் வானொலி முகாமையாளராக துவாரகி விசாரதனும் வெற்றிகரமாக தம் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக லண்டனிலும் ,தாயகத்திலும் இரு அணிகளும் பக்க பலமாக செயற்பட்டு வருகின்றனர் .
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த 24 வருட வெற்றி பூர்த்தியின் பின்னால் உண்மையும் அர்ப்பணிப்பும் திறமையும் சமூக ஆர்வமும் கொண்ட பல பணியாளர்களின் கூட்டு உழைப்பும் இருக்கிறது .
ஐபிசி தமிழ் வானொலி ,
மின்சார தடை , பொருளாதார தடை , ஊடகத்தின் மீதான தடை இத்தனைக்கு மத்தியிலும் சமூக பொறுப்புள்ள ஊடகமாய் ஐபிசி தமிழ் வானொலி தனது கடமையை செய்திருக்கிறது . இன்றைக்கு உலகெங்கும் இத்தனை லட்சோப லட்ச நேயர்களை சம்பாதித்து கொள்ள நேர்மையும் உண்மையுமே பெரும் காரணம் .
கால ஓட்டத்தில் இன்று எத்தனையோ நவீன தொடர்பாடல் தொழில் நுட்பங்களும் புதுப்புது வானொலிகளும் தோன்றிவிட்டாலும் ஐபிசி தமிழ் எனும் நாமம் நின்று நிலைப்பதற்கு முக்கிய காரணம் பிசிறற்ற மொழியும் மண் மீதும் மக்கள் மீதுமான அதன் மெய் பற்றும் தான் .
24 வருட வெற்றியினை தக்க வைத்துக் கொள்வதென்பதும் நம்பிக்கையினை காப்பாற்றுவதென்பதும் சாதாரணமல்ல . அது நேயர்களாகிய உங்களின் அன்பும் ஆதரவுமின்றி சாத்தியமும் அல்ல . இப்பெரு வெற்றிக்கு காரணமாய் நின்று ஆக்கமும் ஊக்கமும் அளித்திருக்கும் எமது நேயர்களை அன்போடு இந்த பிறந்த நாளில் நினைவில் கொள்கிறோம் .
அத்துடன் இப்பயணத்தில் எங்களோடு கை கோர்த்து அனுசரணை வழங்கியிருக்கும் எல்லா விளம்பதராரர்களுக்கும் நன்றி சொல்கிறோம் . நமது இலக்கு பெரிது. அது இலகுவானதொன்றல்ல .
ஆனால் நாங்கள் அந்த இலக்கை அடைய இன்னும் பல படிகளை இன்னும் பல தடைகளை கடக்க வேண்டியிருக்கிறது . வாருங்கள் இதே மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் ஐபிசி தமிழ் வானொலி குடும்பமாக இணைந்து பயணிப்போம் . உலக தமிழருக்கு ஓர் உறவுப்பாலம் அமைப்போம்.
ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம் 20 மணி நேரம் முன்