அடித்து விரட்டினாலும் செல்லமாட்டோம் -மைத்திரிக்கு பதிலடி
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்தநிலையில் தம்மை அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை அவர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் தீர்மானித்துள்ளது.
கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்
இதன்படி, அமைச்சர் பதவிகளை ஏற்று தற்போதைய அரசாங்கத்தில் இணைந்து கொண்ட நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க, சாந்த பண்டார, லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டியய மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
அடித்து விரட்டினாலும் போக மாட்டோம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட சில சந்தர்ப்பவாதிகள், தமது சொந்த நலனுக்காக தற்போது அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதற்காக எம்மைக் குற்றம் சுமத்துகின்றனர் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எங்களை அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டு போக மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
