கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி சந்தேக நபர்கள் மூவர் கைது!
புல்மோட்டை கொக்கிளாய் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (27) சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்கண்ட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது, இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்திய படகுகள், பிடிக்கப்பட்ட மீன்கள், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மீன் இனத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும், சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கத்துடன், சிறிலங்காவை சுற்றியுள்ள கடலோர மற்றும் கடல் பகுதிகளில் கடற்படை வழக்கமாக ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
03 பேர் கைது
இவ்வாறு நேற்று (27) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரன்வேலி தலைமையில் கொக்கிளாய்க்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேரை கடற்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மேலும் மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகு, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 105 கிலோ மீன்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் ஆகியவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 42 வயதுக்குட்பட்ட குச்சவெளியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், அவர்களது உடைமைகள் மற்றும் மீன்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.