சட்டவிரோதமான அரசாங்கம் நெடுநாள் நிலைக்காது - குமார வெல்கம
குறுக்கு வழியில் பிரதமர் பதவியை பெறுவது சட்டத்திற்கு முரணானது என நானும், அமைச்சர் சமல் ராஜபக்சவும் (Chamal Rajapaksa) பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) ஆலோசனை வழங்கினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama) தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"எங்களது ஆலோசனைகளுக்கு எதிராக ஏனையவர்கள் ஆலோசனை வழங்கியதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ' முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியை வழங்கினால் அதனை ஏற்பேன் என்றார். 52 நாள் இடைக்கால அரசாங்கத்தில் தேவையான அமைச்சு பதவியை ஏற்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச என்னிடமும், அமைச்சர் சமல் ராஜபக்சவிடமும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான அரசாங்கம் நெடுநாள் நிலைக்காது ஆகவே எந்த அமைச்சு பதவியும் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குறிப்பிட்டு வெளியேறினேன். 2019ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தேன்.
அரச நிர்வாகம் தொடர்பான திறன் இல்லாதவர் அரச தலைவராகுவதற்கு தகுதியற்றவர் என்பதை நாட்டு மக்களிடம் பகிரங்கமாக குறிப்பிட்டேன். அவர் பலவீனமான அரச தலைவர் என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 30 வருட கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்தினார். குறுகிய காலத்தில் நாடும் அபிவிருத்தி செய்யப்பட்டது.
2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவரது ஆட்சியை நாட்டு மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்களை வரையறையற்ற வகையில் அரசியலில் இணைத்துக் கொண்டதால் அவரது ஆட்சியை மக்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள்.
அதன் காரணமாக அவர் 2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தார். அதனை தொடர்ந்து அவரது சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கமும் பலவீனமானது.
நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசதலைவருக்கும் இடையிலான முரண்பாடு நல்லாட்சி அரசாங்கத்தை முழுமையாக பலவீனப்படுத்தியது. 2019ஆம் ஆண்டு அரசதலைவர் தேர்தலில் மக்கள் கோட்டாபய ராஜபக்சவை தெரிவு செய்தார்கள்.
பிரதேச சபை உறுப்பினராக கூட பதவி வகிக்காத ஒருவர் அரச தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவது பொருத்தமற்றது ,ஆகவே அவர் அரச நிர்வாகத்திற்கு தகுதியற்றவர் என்பதை எனது 40 வருட கால அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டேன். எமது கருத்தை மக்கள் அப்போது விமர்சித்தார்கள் தற்போது முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகம் பலவீனமானது என்பதையும் அவரது வெற்றி தோல்வியையும் முகப்புத்தகம் பக்கம் சென்றால் அறிந்துக் கொள்ளலாம். தனக்கு அரசியல் அனுபவம் போதாது என்பதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார் "என மேலும் தெரிவித்துள்ளார்.