நான்கு படகுகளில் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கையர்! திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர்
இலங்கையில் இருந்து கடந்த மாதம் சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த நான்கு படகுகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து கைப்பற்றியதாக அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த படகுகளில் வந்த 125 பேரை பொறுப்பேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பியதாக அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மாதத்தில் அதிகளவான சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஒரே தடவையில் பிடிப்பட்டது இதுவே முதல் முறை எனவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை
அவுஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் குடியேற்றம் மற்றும் தேச எல்லை சட்டங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலிய சமஷ்டி அரசு தெரிவித்துள்ளது.
இதனால், அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடியேற்றவாதிகள் உடனடியாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.