மீளாய்வு நிறைவு : இலங்கைக்கு 695 மில்லியன் டொலர்களை விடுவித்த IMF
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கூட்டு மீளாய்வுகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக விடுவிப்பதற்கும் அனுமதி அளித்துள்ளது.
இந்த புதிய தவணையுடன், இந்த திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
மத்திய கிழக்கு போர்
இது குறித்து சர்வதேச நாணய நிதியம் நேற்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மத்திய கிழக்கு போர் மற்றும் 'டித்வா' சூறாவளியின் பின்னடைவுகள் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்களுக்கு மத்தியிலும், சீர்திருத்த திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் பொதுவாக வலுவாக இருந்தது.

இலங்கை 2025 டிசம்பர் இறுதி வரையிலான அனைத்து அளவிடக்கூடிய செயல்திறன் அளவுகோல்களையும் பூர்த்தி செய்துள்ளதுடன், பெரும்பாலான கட்டமைப்பு மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன அல்லது தாமதங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவு - மீட்பு விலையிடலை மீண்டும் நிலைநிறுத்துவது தொடர்பான முன்தேவை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகளைத் தவிர்த்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதை அல்லது தீவிரப்படுத்துவதை தவிர்த்தல் ஆகிய இரண்டு தொடர்ச்சியான செயல்திறன் அளவுகோல்களை இலங்கை பின்பற்றத் தவறியுள்ளது.
மீட்புச் செலவினங்கள்
மத்திய கிழக்கு மோதல்களுடன் தொடர்புடைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் காரணமாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் பதிவான 5வீதத்தில் இருந்து 2026 இல் 3வீதமாகக் குறைவதுடன் 2026 இல் பணவீக்கம் 5வீதமாக உயரும், நடப்புக் கணக்கு இருப்பு மீண்டும் பற்றாக்குறையாக மாறும்.

'டித்வா' சூறாவளியைத் தொடர்ந்தான மீட்புச் செலவினங்கள் உள்ளிட்ட பொருளாதார அதிர்ச்சிகளுக்குப் பதிலளிக்கும் வகையில் 2026 இல் நிதித் தளர்த்தல்களை மேற்கொள்வது பொருத்தமானது. எனினும் 2027 ஆம் ஆண்டு முதல் இலங்கை தனது நிதி இலக்குகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.
நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு நிலையான வருவாய் திரட்டல், பொது நிதி முகாமைத்துவ சீர்திருத்தங்கள், மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து முக்கியமானவையாக விளங்குவதாக பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்; கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகப்படியான மாற்று விகித நெகிழ்வுத்தன்மை வெளிநாட்டு கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |